காவிரி நதிநீர் பிரச்சனையில் உரிமையை நிலைநாட்டியது அதிமுகதான்... ஜெயகுமார் பெருமிதம்..!
கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக மேகதாது அணை விவகாரம் தொடர்பாக இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சியினர் பங்கேற்றனர். பிறகு 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் அனைத்துக் கட்சி தீர்மானத்தை டெல்லி சென்று மத்திய அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு அளித்துள்ளனர்.
அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’கர்நாடகாவில் மேகதாது அணை எந்த சூழலிலும் கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறோம். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு அனைத்து ரீதியிலும் சட்டப்போராட்டம் நடத்தி, 72 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றும் உரிமையை நிலைநாட்டிய இயக்கம் அதிமுக தான்’’என அவர் தெரிவித்தார்.