திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்...!தீர்மானத்தை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்- கே.பி.முனுசாமி அதிரடி
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு கூட்டம் உற்சாகமாக நடைபெறும்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள சென்னை வானகரத்தில் உள்ள ஶ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், கே.பி.முனுசாமி, நத்தம் விஸவநாதன்,வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம்,விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர்கள்,செயற்குழு உறுப்பினர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு அதற்கான அத்தாட்சி கார்டு தலைமைக் கழகத்திற்கு வந்துவிட்டது. எனவே திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு ஸ்ரீவாரு மண்டபத்தில் கழக நிர்வாகிகளோடும், தொண்டர்களும் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் உறுதியாக நடைபெறும் என தெரிவித்தார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இந்த நிமிடம் வரை அந்த கடிதம் வரவில்லை அந்த கடிதத்தின் சாராம்சம் எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டார். சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளாத காரணத்தால் கூட்டதை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதில் அளித்த அவர்,
பொதுக்குழு தீர்மானத்தை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்வார்
கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பொதுக்குழு நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்தால் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்க வேண்டாம் என கூறியிருந்தார் இப்போது இப்படி கூறுவது ஏன் என்று தெரியவில்லையென கூறினார். எதிர்க்கட்சியாக இருக்கின்ற இயக்கம் நாளை ஆளுங்கட்சியாக வருவதற்கு தயார்ப்படுத்திக் கொண்டுள்ள இந்த இயக்கம் ஒரு சில சந்தர்ப்பவாதிகள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக முயற்சி செய்கிறார்கள், காலம் அவர்களுக்கு சரியான தண்டனை வழங்கும் என தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர் பல்வேறு பதவிகளை வகித்தவர் தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்வார், தனது கருத்துகளை தெரிவிப்பார் பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக்கொள்வார், இணை ஒருங்கிணைப்பாளரும் ஏற்றுக்கொள்வார் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வோம் என கே.பி.முனுசாமி உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்