மைக்கை கண்டாலே சிலர் கோபப்படுகிறார்கள்; அண்ணாமலையை விமர்சித்த ஜெயக்குமார்?
சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிலர் பத்திரிகையாளர்களின் மைக்கை கண்டாலே கோபப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின் உட்பட அதிமுக பிரமுகர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார் "ஆளுநர் விவவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச்சியற்று செயல்படுகிறார். ஆளுநர் குறித்து திமுகவினர் ஒருமையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற பிப்.27ல் இடைத்தேர்தல்
மேலும் கோபத்தை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பண்போடு செயல்பட வேண்டும். சிலர் பத்திரிக்கையாளர்களின் மைக்கை கண்டாலே டென்ஷன் ஆவதாக பாஜக தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த ஜெயக்குமார், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என ஓபிஎஸ் கூறுகிறார். அதாவது சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஒன்றுபட்டால் அவர்களுக்கு தான் வாழ்வு. தமிழக மக்களுக்கு எந்த வாழ்வும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், பொதுக்குழுவால் நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மூடப்பட்ட அதிமுக கதவுகள் மீண்டும் திறக்காதென திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதாக கூறிய அவர் இது பற்றி பேசுவதற்கு ஆளுநர் டெல்லி சென்றிருப்பதாகவும் ஆனால் திமுக கொடுத்த புகாரின் அடிப்படியிலேயே ஆளுநர் விசாரணைக்காக டெல்லி சென்றிருப்பதாக பொய்யான பிம்பத்தை திமுகவினர் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.