அதிமுக ஐடி விங்க் செயலாளர் அஸ்பயர் சாமிநாதன் ராஜினாமா..! பின்னணி என்ன?
தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் சென்னை மண்டல தலைவர் பதவியில் இருந்து விலகியதோடு அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அதிமுகவில் தற்போது செயல்பாடு தொழில்முறையிலும், தொலைநோக்கு பார்வையிலும்இல்லை என்று வேறு காரணத்தை கூறியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு என ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அஸ்பயர் சாமிநாதன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு பிறகு மறுபடியும் சேர்க்கப்பட்டு என பந்தாடப்பட்ட நிலையில் தற்போது அதிமுகவில் இருந்தே ஒரேடியாக விலகியுள்ளார்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது சமூக வலைதளங்களின் பங்களிப்பு ஆரம்ப நிலையில் இருந்தது. தேர்தலில் மேல்தட்ட மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. அடுத்தடுத்த தேர்தல்களில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றும் என்று கணித்து திமுக முதலில் தகவல் தொழிநுட்ப அணியை அமைத்தது. அதனை தொடர்ந்து அதிமுகவிலும் அப்படி ஒரு அணியை அமைக்க தீவிர முயற்சி நடைபெற்று ஒரு வழியாக அஸ்பயர் சாமிநாதன் என்பவரை வைத்து அந் அணியை உருவாக்கினார் ஜெயலலிதா. சுமார் நான்கு வருடங்கள் அந்த பதவியில் சாமிநாதன் இருந்தார்.
பெரிய அளவில் சமூக வலைதளங்களில் அதிமுகவிற்கு அவரால் அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை. திமுக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சியினருக்கு கூட அதிமுகவினலால் சமூக வலைதளங்களில் ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்கு காரணம் நிர்வாகிகள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள். அதிலும் கட்சியில் ஜெயலலிதாவின் அதிருப்தியை சம்பாதித்து ஓரம்கட்டப்பட்டவர்களின் ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமிநாதன் நிர்வாகிகளை நியமித்தது பெரிய சர்ச்சையானது. மேலும் தகவல் தொழிநுட்ப பிரிவு செயலாளராக சாமிநாதன் நியமிக்கப்பட்டதை சசிகலா கடைசி வரை ஏற்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அஸ்பயர் சாமிநாதன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்துவிட அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஓபிஎஸ் பக்கம் சென்று அவரது தரப்பிற்கு தகவல் தொழில்நுட்ப அணியாக சாமிநாதன் செயல்பட ஆரம்பித்தார். ஓபிஎஸ் – இபிஎஸ் அணி இணைந்த பிறகு ஓபிஎஸ் தரப்பிடம் இருந்து பிரிந்து இபிஎஸ் தரப்பிற்கு சென்றதால் மறுபடியும் அவருக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி கிடைத்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக தொழில்நுட்ப பிரிவு முற்றிலுமாக கலைக்கப்பட்டது.
யாருக்கும் மாநில அளவிலான பொறுப்புகள் இல்லை என்று கூறி அஸ்பயர் சாமிநாதனின் மாநிலச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. சென்னை மண்டலத்திற்கு மட்டும் அவர் தலைமை வகிக்கும் வகையில் மாற்றப்பட்டார். இந்த நிலையில் தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில் சென்னை மண்டல தலைவர் பதவியில் இருந்து விலகியதோடு அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு காரணம் அதிமுகவில் தற்போது செயல்பாடு தொழில்முறையிலும், தொலைநோக்கு பார்வையிலும்இல்லை என்று வேறு காரணத்தை கூறியுள்ளார்.
ஆனால் அஸ்பயர் சாமிநாதன் மட்டும் அல்ல வேறு சிலரும் விரைவில் கட்சியில் இருந்து விலகுவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள் என்கிறார்கள். இதுநாள் வரை அமைதியாக இருந்த சாமிநாதன் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் விலகியதில் காரணம் உள்ளது என்கிறார்கள். அதவாது ஓபிஎஸ் – இபிஎஸ் என இரண்டு தலைவர்கள் இருப்பதால் அவர்களில் ஒருவரின் ஆதரவாளராக அடையாளம் காட்டிக் கொண்டு கட்சி விரோத நடவடிக்கையில் சில முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதை ஓபிஎஸ் – இபிஎஸ் என இருவரையுமே அதிர வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
அதிலும் புகழேந்தி திமுகவினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் அவர் கட்சியில் இருந்து நிக்கப்பட்டுள்ளார். இதே போல் அஸ்பயர் சாமிநாதனும் சசிகலா அல்லது தினகரன் தரப்போடு தொடர்பில் இருக்கலாம் என்கிற சந்தேகம் அதிமுக தலைமைக்கு வந்திருக்கிறது என்கிறார்கள். மேலும் சசிகலா மீண்டும் அரசியல் களம் காண துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரும் தகவல் தொழில்நுட்ப அணியை பலப்படுத்தும் முடிவில் உள்ளதாக கூறுகிறார்கள். எனவே அஸ்பயர் சாமிநாதன் சசிகலா பக்கம் சாயலாம் என்று அதிமுக தலைமை மோப்பம் பிடித்து அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்ததாகவும் அதில் சில சம்பவங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை அடுத்து தான் கட்சியில் இருந்து நீக்கப்படக்கூடும் என்பதை முன்னரே அறிந்து சாமிநாதன் பதவியில் இருந்து விலகி கட்சியில் இருந்து ஓடிவிட்டார் என்று அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.