ஐ.டி., போச்சு... அமலாக்கத் துறை வந்தது... டும் டும் டும் டும்... திக்கித் திணறும் தினகரன்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் பெயரில் போலியாக பதிவு செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் குறித்த விவரங்கள் வெளியானதுமே, சசிகலா குடும்பத்தினர் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை துவங்கி, சசிகலா குடும்பத்தினரை மையப்படுத்தி தமிழகம், பெங்களூர் உள்ளிட்ட 187 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில், 355 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூன்றாவது நாளாக இன்றும் கூட, 134 இடங்களில் வருமான வரி சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. ஆனால், இன்னும் சோதனை நிறைவடையாததால், மேலும் ஏராளமான ஆவணங்களை சரி பார்க்க வேண்டியுள்ளது, ஆவணங்களின் படி பல வங்கிக் கணக்குகளை ஆராய வேண்டியுள்ளது என்பதால், அதன் பிறகே முழு விவரமும் தெரியும் என்று கூறுகிறார்கள்.
பல கோடி மதிப்புள்ள சொத்துகளில் வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றப் படும் நிதி பரிவர்த்தனைகளில் வெளிநாட்டுத் தொடர்புகளும் இருப்பதால், மீண்டும் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியுள்ளது தினகரன் தரப்பு. ஏற்கெனவே, தாம் 30வயசில் ஜெயிலுக்குப் போனவன், இதற்கெல்லாம் அஞ்சுவதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் தினகரன், ஃபெரா வழக்கில் தான் சிக்கியுள்ளார். அவர் மீதான அமலாக்கத் துறை வழக்கு இன்னும் இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை மூலம், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை வசம் பிடி இறுகியுள்ளது.
குறிப்பாக, ஜெயா டிவி.,மற்றும் ஜாஸ் சினிமாஸ் ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப் பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஆவணங்கள் பல அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப் பட வேண்டியது எனும் முடிவுக்கு வருமான வரித்துறை வந்துள்ளது.
இதனால், தினகரன் தரப்பு மேலும் அப்செட் ஆகியுள்ளது. என்னதால், திருவண்ணாமலை சென்று சாமியார்களை சந்தித்து வந்தாலும், உள்ளுக்குள் திகிலுடன் தான் சுற்றி வருகிறார் தினகரன் என்கிறார்கள்.