சசிகலா குடும்பத்துக்கு பயந்தே பொய் சொன்னோம்..! இப்படி சொல்ல கூச்சமா இல்ல அமைச்சரே?
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு முரணான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மரணமடைந்து 10 மாதங்களுக்கு மேலான இந்த நிலையில், பல்வேறு மாற்றுக்கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரைப் பார்த்தோம்; இட்லி சாப்பிட்டார்; எங்களிடம் பேசினார் என்றெல்லாம் கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சசிகலா குடும்பம் சொன்னதைத்தான் கூறினோம் என்றும் ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை என்றும் பல்டி அடித்தார்.
திண்டுக்கல் சீனிவாசனின் முரணான பேச்சு, சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ஜெயலலிதாவை அனைவரும் பார்த்தோம் என அடித்து சொன்னார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு முற்றிலும் முரணாக மற்றொரு கருத்தை செல்லூர் ராஜூ தெரிவித்ததால் மேலும் பரபரப்பு அதிகமானது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதை அமைச்சர்களே உறுதி செய்கின்றனர் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில், சசிகலா குடும்பத்திற்கு பயந்தே அவர்கள் சொன்னதை ஊடகங்களிடம் தெரிவித்ததாக அமைச்சர் கே.சி.வீரமணி, தன் பங்குக்கு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குணமாகி வந்தவுடன், சசிகலா குடும்பம் இல்லாதது பொல்லாததை எல்லாம் போட்டுக் கொடுத்துவிடும் என்று பயந்தே சசிகலா குடும்பம் சொன்னதை எல்லாம் ஊடகங்களிடம் கூறியதாகவும் ஆனால் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இப்படியாக தாங்கள் அமைச்சர்கள் என்பதையும் மறந்து, முன்னுக்குப் பின் முரணாக அமைச்சர்கள் பேசிவருகின்றனர்.