கடந்த 5ம் தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினமா செய்தார். இதையடுத்து அதிமுக பொது செயலாளர் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு பதவி பிராமாணம் செய்யும் நிகழ்ச்சி, கவர்னர் வராததால், ரத்து செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று முன்தினம் இரவு ஒ.பன்னீர்செல்வம், திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்து எழுந்த அவர், அதிமுக பொது செயலாளர் சசிகலா மீது பரபரப்பு புகார் கூறினார்.

இதையடுத்து, சசிகலா மீது அதிருப்தி தெரிவித்து இருந்த எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மூத்த நிர்வாகிகள் என ஏராளமானோர் நேற்று மாலை வரை, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் 100க்கு மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. கூட்டம் முடிந்ததும், அவை தலைவர் மதுசூதனன் உள்பட சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் சொகுசு பஸ் மூலம் வெளியூருக்கு அனுப்பப்பட்டனர்.

ஆனால், அந்த பஸ்சில் பயணம் செய்த, எம்எம்எல் சண்முகநாதன், பஸ்சில் இருந்து தப்பி, ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று தஞ்சமடைந்துவிட்டார். இதனால்,சசிகலா தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, புறநகர் பகுதியில் அனைத்து எம்எல்ஏக்களையும் பாதுகாக்க திட்டமிட்டனர்.

இதை தொடர்ந்து, சசிகலாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நேற்று இரவு கல்பாக்கம் அருகே கூத்தங்கரை கடலூர் கிராமத்தில் தேனியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான அரேபியன் ரிசார்ட்டில் தங்க வைக்ப்பட்டனர். இரவு ரிசார்ட் விடுதியில் தங்கினர். இன்று அதிகாலை முதல் அனைத்து எம்எல்ஏக்களும், நடைபயிற்சி செய்தனர்.

எம்எல்ஏக்கள் விடுதியில் இருந்து தப்பிக்க கூடாது என்பதற்காக மாமல்லபுரம் டிஎஸ்பி தென்னரசு தலைமையில், 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்