கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்திலேயே இக்கட்சி அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2021 தேர்தலை எதிர்கொள்ள முடிவானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 17 அன்று  எடப்பாடி பழனிச்சாமி 4-ம் ஆண்டில் முதல்வராக அடி எடுத்து வைத்ததையொட்டி டீமோஸ் நிறுவனம் சார்பில் வாழ்த்து அட்டை சமூக ஊடங்களில் பகிரப்பட்டன. தற்போது தமிழக அரசின் திட்டங்களை இந்நிறுவனம் உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறது. தமிழக அரசின் திட்டங்களை சமூக ஊடங்களில் பகிரும்வண்ணம் அதிமுக டீமோஸ் நிறுவனம் இணைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் வியூகங்களுக்காகவும் டீமோஸுடன் அதிமுக இணைந்துள்ளதாக தற்போது தகவல்கள் சிறகடிக்கின்றன.

அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக-பிரசாந்த் கிஷோரின் ஐபேக்கிற்குப் போட்டியாக அதிமுக டீமோஸ் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து 2021 தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், திமுக ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வியூகங்களை வகுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக தேர்தல் வியூகம் வகுப்பதில் கைதேர்ந்த கார்ப்பரேட் நிறுவனரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கைகோர்த்தது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ், அரசியல் கட்சிகளையும் முடக்கிப்போட்டுள்ளதால், மக்களைச் சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் ஓரளவுக்கு இளம் வாக்காளர்கள், பொதுமக்களை தொடர்புகொள்ள வழியிருப்பதால், தற்போது அரசியல் கட்சிகள் அந்த வழியில் களமிறங்கத் தொடங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோரின் யோசனைப்படி ‘ஒண்றினைவோம் வா’ என்ற திட்டத்தை சமூக ஊடகங்கள் வழியாக திமுக முன்னெடுத்துவருகிறது. அடுத்த சில மாதங்களில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மேலும் பல திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வகுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.