ஆளுநருக்கு ‘செக்’ வைக்க அடுத்த ஆளுநரை நாடும் ஆளும் கட்சி..! கைகொடுக்குமா முயற்சி..?
இந்த வாரத் துவக்கத்தில் தமிழகத்தைக் கலக்கிய நிகழ்வு, கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வுகள்தான். பல்கலை பட்டமளிப்பு விழாவுக்காக கோவைக்குச் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அதன் பின்னர், கோவையில் காவல் ஆணையர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மெற்கொண்டார்.
ஸ்மார்ட் சிட்டி நகருக்கு தேர்வாகி கட்டமைப்பில் வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் கோவையில், நகரின் நிறை குறைகளைக் கேட்டறிய இந்த ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார் ஆளுநர். அதே போல், திருப்பூர் மாவட்டத்துக்கும் திடுமெனச் சென்று, அங்கிருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்னும் இதே பாணியில் தொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்வேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் ஆளுநரின் செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு இத்தகைய அதிகாரம் இல்லை என்று பலரும் குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சியினர், இதனை பெரிதும் விமர்சித்தனர். மாநில சுயாட்சி பறிபோகிறது என்று எச்சரித்தனர். ஆனால் ஆளும் கட்சியினரோ அமைச்சர்களோ இது குறித்து பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், தங்கள் மானம் மரியாதை குறித்து பலரும் கிண்டல் செய்து வருவதால், இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இப்போது ஒரு அதிமுக., எம்.பி., வாய் திறந்திருக்கிறார். ஆளுநரின் அதிகார வரம்பு குறித்து அலசப்பட்டு வருகிறது. ஆனாலும், இப்போது தினகரன் அணி, திமுக., தரப்பு என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ஆளும் தரப்புக்கு, ஆளுநரே கடைசி நேரப் புகலிடமாக இருப்பதால், இந்தத் தயக்கம் அதிகரித்திருக்கிறது.
இதனிடையே, ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களுக்குத் தடை போட என்ன வழி என்று யோசித்து யோசித்து, கடைசியில் ஆளும் தரப்பு இன்னொரு ஆளுநரிடம் விஷயத்தைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் கேரள ஆளுநர் சதாசிவம். தற்போது, மத்திய அரசிடமும் சரி, ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் சரி மிக நெருக்கமாகத் திகழும் சதாசிவம் மூலம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அதிரடிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து அமைதிப்படுத்த முயற்சி செய்கிறார்களாம். இருந்தாலும், காங்கிரஸ், பாஜக, என பல்வேறு கட்சிகளில் இருந்துவிட்டு, அரசியல்வாதியாக அதிரடி அரசியல்களில் ஈடுபட்டுவிட்டு, இப்போது ஆளுநராக ஆளுநர் மாளிகையில் அடங்கிக் கிடக்காமல், அதிரடியில் களம் கண்டுவரும் புரோஹித் அமைதியாவாரா என்று ஆளும் தரப்பினர் எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.