கடும் மனக் குழப்பத்தில் டிடிவி.தினகரன் - அட்வைஸ் செய்த நடராஜன்
அதிமுக என்பது எடப்பாடி, பன்னீர், தினகரன் என மூன்றாக பிரிந்து கிடந்தாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் மூன்று அணிகளும் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகவே காட்டி கொண்டுள்ளன.
கட்சி மற்றும் ஆட்சியை பொறுத்தவரை, சசிகலா குடும்பத்தின் பிடி தளர்ந்து விட்டது, தினகரன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு விட்டார். அவருக்கு சசிகலா குடும்பத்தின் ஆதரவே இல்லை என்பதுதான் இப்போதைய பேச்சாக இருக்கிறது.
அதனால், கட்சி மற்றும் ஆட்சியில் தம்முடைய செல்வாக்கை உறுதிப்படுத்த வேண்டும் என்றே அவர் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமையன்று நடராஜனிடம் பேசிய தினகரன், சிலவற்றை தெளிவு படுத்தி இருக்கிறார். குறிப்பாக, கட்சிக்கும், ஆட்சிக்கும் தம்மால் எந்த பாதிப்பும் வராது என்றும் உறுதி கூறி இருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பாஜகவின் தலையீடுகள் அதிகமாகவே இருக்கின்றன. எடப்பாடியும், பன்னீரும் அதிமுக என்பதைவிட, மோடியின் விசுவாசிகளாகவே தங்களை காட்டிக்கொள்ள முற்படுகின்றனர்.
காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருப்பதாலும், அதிமுகவுக்கு நாடாளுமன்ற துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரிப்பதில்லை தவறில்லை.
ஆனால், அவ்வாறு ஆதரவளிப்பதை, கட்சியின் பொது செயலாளராக இருக்கும் சின்னம்மாதானே அறிவிக்க வேண்டும். தலைமை நிலைய செயலாளராக இருக்கும் எடப்பாடி எப்படி அறிவிக்க முடியும்? என்று நடராஜனிடம் தினகரன் கேட்டுள்ளார்.
அதற்கு, நீ சொல்வதெல்லாம் நியாயம்தான். ஆனால் தற்போதுள்ள நிலையில், கட்சி மற்றும் ஆட்சியில் நம்முடைய பிடி கொஞ்சம், கொஞ்சமாக தளர்ந்து விட்டது.
இந்த நேரத்தில் நீ உனக்கென ஒரு தனி அணியை உருவாக்கிக் கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதால், கட்சியும், ஆட்சியும் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது.
பாஜக வேட்பாளருக்கு ஆதரவு என்று எடப்பாடி அறிவித்தபோது, நீ அதை விமர்சிக்காமல் இருந்திருந்தால், அது கட்சியின் ஒருமித்த முடிவாக தெரிந்திருக்கும். ஆனால், நீ அதை விமர்சித்ததால், அது எடப்பாடியின் தனிப்பட்ட முடிவாக ஆகி உள்ளது என்று நடராசன் கூறி இருக்கிறார்.
மேலும், கட்சியும் ஆட்சியும் நம் கட்டுப்பாட்டை விட்டுப் போய் விட கூடாது. அப்படி போய் விட்டால், எதுவும் செய்ய முடியாது. இதைத்தான் சசிகலா நினைக்கிறார் என்றும் நடராஜன் கூறி இருக்கிறார்.
அதற்கு, கட்சிக்கும், ஆட்சிக்கும் என்னால் எந்த பாதிப்பும் வந்துவிட கூடாது என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதி கூறி இருக்கிறார் தினகரன்.
ஆனாலும், தினகரனின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா, நேற்று பெங்களூரு வந்த தினகரனை சந்திக்காமலே திருப்பி அனுப்பி விட்டார் என்று கூறப்படுகிறது.