மாஜி மந்திரி சரோஜா கைது உறுதி.. திரும்பப் பெறப்பட்ட ஜாமீன் மனு..
பண மோசடி வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றுள்ளார்.விரைவில் இவர் கைது செய்யப்படலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது, சத்துணவு துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக அவரது உறவினர் குணசீலன் புகார் அளித்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக நாமக்கல் மாவட்ட ‘குற்றப்புலனாய்வு’ பிரிவு போலீசில் புகார் செய்தார் இவர்.
இந்த விசாரணையில் சுமார் 15 பேரிடம், 76.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிமுக மாஜி மந்திரியான சரோஜா மற்றும் அவரது கணவர் ஆன லோகரஞ்சன் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார்.இந்நிலையில், முன் ஜாமின் கோரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சரோஜாவும், அவரது கணவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முன்ஜாமின் மனுவை அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றுள்ளார்.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த பண மோசடி வழக்கில் கைது செய்துவிட்டால் என்ன செய்வது என்று மாஜி மந்திரியான சரோஜாவும்,அவரது கணவரும் தலைமறைவாகி உள்ளதாக கூறுகின்றனர். இது குறித்து பேசிய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பிகா, ‘இந்த வழக்கு பதிவு செய்த நாள் முதல், முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். நாங்கள் விசாரணைக்கு சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. அவர்கள் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருகிறோம்.விரைவில் அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்’ என்று கூறினார்.