“அதிமுகவால் இனி எழுந்து நிற்க முடியாது” - புதிய வியூகத்தில் விஜயகாந்த்
அதிமுக இனி எழுந்து நிற்க முடியாது. தேமுதிகவை பலப்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிக சார்பில் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.
தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் வரும் 9ம் தேதி நடத்தப்பட உள்ளது. உட்கட்சி தேர்தலை நடத்த மொத்தம் 63 தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது.
இதில், தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உட்பட 63 பொறுப்பாளர் களும், அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு சுமார் 30 நிமிடம், ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகள், கூறியதாவது:-
“அதிமுக தற்போது 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவுக்கு இனி இறங்கு முகம்தான். அதிமுக இனி எழுந்து நிற்க முடியாத நிலை உள்ளது.
எனவே, தேமுதிமுகவை பலப்படுத்த நீங்கள் கிளை, ஊராட்சி, பேரூராட்சி, மாவட்டம், மாநகராட்சிகளில் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும். உட்கட்சி தேர்தல் வரும் 9ம் தேதி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும். அதற்குள், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
நம் கட்சி யின் உட்கட்சி தேர்தலில் 30 சதவீதம் பதவிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அரசி யல் சூழல்கள் மாறியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு, கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து அறிவிப்பேன்” என்று எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.