உடைகிறதா அதிமுக !! பாஜகவுடன் கூட்டணி அமைக்க கடும் எதிர்ப்பு… பின்னணியில் யார் ?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தம்பிதுரை, அன்வர்ராஜா மற்றும் சில அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அதிமுகவில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அக்கட்சி உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பின்னணியில் சசிகலா உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவது என பாஜக, காங்கிரஸ் மற்றும் அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகள் என அனைத்தும் களம் இறங்கியுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அந்த கூட்டணியில், ம.தி.மு.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம் என எதிர்பார்ககப்படுகிறது.
அதே நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக இதுவரை கூட்டணி குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசி வந்தாலும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறி வருகிறது,
இதற்கு காரணம் ஆளும் கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதுதான்.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் போன்றோர், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விரும்புகின்றனர்.
ஆனால், மக்களவை துணை சபாநாயகர், தம்பிதுரை, எம்.பி., அன்வர்ராஜா போன்றோர் எதிர்க்கின்றனர். அதேபோல், அதிமுகவில் தற்போதும் உள்ள, சசிகலா ஆதரவு நிர்வாகிகளும், பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு கொடி பிடிக்கின்றனர். இந்த கருத்தை, தம்பிதுரை உள்ளிட்டோர், வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அதிமுக-பாஜக –பாமக-தேமுதிக- புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைத்து ஒரு பலமான கூட்டணி அமைத்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எடப்பாடி முயற்சி செய்து வருகிறார்.
இதனால் தம்பிதுரை தலைமையில் ஒரு குரூப் அதிமுக பி டீம் போல செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குப் பின்னால் சசிகலா இருந்து இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன