வெங்காயம், உருளைக்கிழங்கை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேருங்கள்: தலையில் அடித்துக் கதறும் வணிகர்கள்.
வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய உணவு பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை பெரிய நிறுவனங்கள் பதுக்கல் செய்து அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
அத்தியவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்க்கப்பட வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசிய உணவு பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை பெரிய நிறுவனங்கள் பதுக்கல் செய்து அதிக விலைக்கு விற்க வாய்ப்புள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.
குறிப்பாக விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே உருளைக்கிழங்கு, வெங்காயத்தை அத்தியாவசிய உணவு பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக நாங்கள் ஏற்கனவே காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் போராட்டம் நடத்தினோம். எனினும் தமிழகத்தில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே வியாபாரிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏராளமான வணிகர்கள் இறந்துள்ளனர். கொரோனா காலத்தில் போலீசார், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரைப் போன்று வணிகர்களும் பொதுமக்களுக்காக சேவையாற்றினர்.
எனவே கொரோனாவால் இறந்த வணிகர்களின் குடும்பத்திற்கு அரசு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் வணிகர்களுக்கு எதிராக காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிபிஐயிடம் வழக்கு சென்றால் உரிய நீதி கிடைக்காமல் போகும் என்ற போக்கை மாற்றும் வகையில் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும். தற்போது தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் காவல்துறை அதிகாரி என்றாலும் அவர் மீது பாரபட்சமின்றி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.