"நேர்மையான போராட்டம் வெற்றிபெற வாழ்த்து சொன்னேன்..." டிராபிக் ராமசாமியை சந்தித்த நடிகை கஸ்தூரி
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை நடிகை கஸ்தூரி சந்தித்துப் பேசியுள்ளார்.
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என்றும் மத்திய அரசின் கைக்கூலிகளாக மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும் டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களைக் காப்பாற்றுவதாக பொய் கூறி வருகிறார்கள். ஒரு வார காலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும். 10 பேரை சுட்டுக் கொன்றாலே ஆட்சியை கலைக்க வேண்டும் என சட்டம் உள்ளது. அதை அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
நேற்று நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவினை தெரிவித்திருந்தார். அதேபோல் அரசியல் பிரபலங்களும் அவருக்கு தொலைபேசியிலும் நேரிலும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி, போராட்ட இடத்துக்கு வந்து டிராபிக் ராமசாமியை இன்று காலை சந்தித்தார். டிராபிக் ராமசாமியை சந்தித்த பிறகு, நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நேர்மையான போராட்டம் வெற்றியடைய வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன் என்று கஸ்தூரி கூறினார்.