நடிகை நயன்தாராவால் அதிமுகவில் மீண்டும் இணைந்த நடிகர் ராதாரவி... உற்சாகத்தில் எடப்பாடி..!
நடிகை நயன்தாரா விவகாரத்தால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நடிகை நயன்தாரா விவகாரத்தால் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடியை அவரது இல்லத்தில் சந்தித்து ராதாரவி தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். நயன்தாராவை அவதூறாக பேசியதாக திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் ராதாரவி. அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் செய்தி விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.
பழம்பெரும் நடிகரும், திராவிடர் கழகத்தின் முக்கிய தூண்களில் ஒருவருமான எம்.ஆர்.ராதாரவின் மகனுமான ராதாரவி கட்சி மாறுவது இது முதன்முறையல்ல. ஆரம்பத்தில் திமுகவில் நட்சத்திர பேச்சாளராகவும், முக்கிய பிரமுகராகவும் ராதாரவி விளங்கினார். ஒரு கட்டத்தில் வருமானம் இல்லாமல், தனது வீட்டையே அடகு வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, அவருக்கு உதவியதாகவும், அந்த விசுவாசத்தின்பேரில், அவர் திமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் அதிமுக சார்பில், சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியத்தை எதிர்த்து வெற்றி பெற்றார். அதன் பின்னர், நடிகர் சங்க பொது செயலாளராக பல ஆண்டுகள் ராதாரவி இருந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து, ராதாரவி ஓரங்கட்டப்பட்ட நிலையில், விஷால் தலைமையிலான அணி, ராதாரவி அணியை தோற்க்கடித்தது. அதன்பின்னர் ராதார ரவி பல்வேறு சரிவுகளை சந்தித்து வந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக பிளவுப்பட்ட நிலையில், ராதாரவி, திமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அப்போது, பேசிய அவர், ‘’தமிழ்நாட்டுக்கு தகுதி உடைய தலைவன் யார் இருக்கிறார்? ஸ்டாலினை விட்டால் யார் இருக்கிறார்கள்? அவரால் தான் தமிழ்நாட்டை காக்க முடியும். இப்போது அதிமுக என்ற ஒன்றே இல்லை’’ எனக் கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நயன்தாராவை பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் ராதாரவி அதிமுகவில் இணைந்துள்ளார்.