பினராயி விஜயன், கெஜ்ரிவாலை தொடர்ந்து மம்தா... - எடப்பாடியை கடுப்பேற்றுகிறாரா கமல்?
அரசியல் கட்சி தொடங்குவேன் என கூறியதில் இருந்து நடிகர் கமலஹாசன், அடுத்த மாநில முதலமைச்சர்களை சந்தித்து வருகிறார். அந்த வரிசையில் முதலமைச்சர் தற்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நடிகர் கமலஹாசன் சில நாட்களாக எடப்பாடி தலைமயிலான அரசை குற்றம் சாட்டி வந்தார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என கூறி அமைச்சர்களின் வாயை கிளறி தமது அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரம் இட்டார்.
இதைதொடர்ந்து நடிகர் கமலஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே மரியாதை நிமித்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து ஓணம் வாழ்த்து தெரிவித்தார். அரசியல் ரீதியாகவும் ஆலோசனை நடத்தினார்.
சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று மாலை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் இன்று இரவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கமல்ஹாசன் சந்திக்கிறார். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் அடுத்த மாநில முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்துவது எடப்பாடியை கடுப்பேற்ற தானோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுகிறது.