மன்னிப்பு கேட்ட பின்பும் சர்ச்சை தொடர வேண்டுமா? வைரமுத்துக்கு ஆதரவாக கருத்து கூறிய அமைச்சர்!
வைரமுத்து மன்னிப்பு கேட்ட பின்னரும் ஆண்டாள் சர்ச்சை தொடர்வது தேவையற்றது என அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தினமணி நாளிதழ் சார்பில், ராஜபாளையத்தில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, அவர் எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரையை படித்தார். அந்த கட்டுரை மறுநாள் அந்த நாளிதழிலும் இடம்பெற்றது.
அந்த கட்டுரையில் வெளிநாட்டு ஆய்வாளரின் கருத்தை மேற்கோள் காட்டி வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்புகளும் வைணவர்களும் வைரமுத்துவிற்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர். வைரமுத்துவும் நாளிதழின் ஆசிரியர் வைத்தியநாதனும் ஆண்டாள் சன்னதிக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்த போதிலும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை மிகழும் இழிவாகவும் கொச்சையாகவும் வசைபாடினார். பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனோ, வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசு அறிவித்தார். இதனால் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஜீயர், உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டாலும் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார்.
இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக கலாச்சாரத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆண்டாள் பிரச்சனை குறித்து வைரமுத்து மன்னிப்பு கேட்ட நிலையிலும், அந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பது தேவையற்ற ஒன்று என்றார். ஆண்டாள் குறித்து புகழ்ந்து கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.