யோகியா..? அகிலேஷ் யாதவா..? உ.பியின் அடுத்த முதல்வர் இவர்தான்... அடித்து சொல்லும் சர்வே முடிவுகள்..!!
உத்தரபிரதேசத்தில் யார் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று இந்திய டிவியின் புதிய சர்வே தற்போது வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சிக்கு தாவி உள்ளனர். இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த ஊரான கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை களமிறக்க சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கோரக்பூர் தொகுதியின் தற்போதைய பாஜக எம்எல்ஏவான ராதா மோகன் அகர்வால், சமாஜ்வாடி கட்சிக்கு வந்தால் அவருக்கு அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அமைச்சர்கள் உட்பட 10 பாஜக எம்எல்ஏக்கள் இதுவரை பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளனர். அதில் 9 பேர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் ஓபிசி தலைவர்கள். பாஜகவிற்கான ஓபிசி ஆதரவு இதனால் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஓபிசி ஆதரவை பெறுவதன் மூலம் அகிலேஷ் யாதவிற்கான வெற்றிவாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இருப்பினும் யோகி ஆதித்யநாத்துக்கே வெற்றி வாய்ப்பு உண்டு என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். அதனை உறுதி செய்வது போல, இந்திய டிவியின் புதிய சர்வே தற்போது வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச தேர்தல் தொடர்பாக கிரவுண்ட் ஜீரோ ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பை இந்தியா டிவி வெளியிட்டுள்ளது.
அதில் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 230 முதல் 235 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2017 உபி தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி இந்தத் தேர்தலில் 160 முதல் 165 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது கடந்த 2017இல் வென்ற 47 இடங்களை விட அதிகம் என்றாலும் கூட, ஆட்சியை அமைக்க இது போதுமானதாக இல்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 முதல் 5 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 202 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் 38.42% மக்கள் ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் 31.51% ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளார். அதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 12.51% சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு வெறும் 8.30% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் உபியை யார் கைப்பற்றுவார்கள் ? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்து இருக்கிறது. யோகியா ? அகிலேஷ் யாதவா ? என்று கூடிய விரைவில் தெரிந்துவிடும்.