தலைமைச் செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.. தமிழக அரசு அதிரடி சுற்றறிக்கை..
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதமும் அதே எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலக வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதமும் அதே எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு என்பது கடைசி ஆயுதம் தான், எனவே மக்கள் முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராமல் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பொதுத் துறை முதன்மைச் செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பொது சுகாதார சட்டப்படி முகக் கவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்க வழக்கமாகும். இது தண்டனைக்குரிய குற்றமாகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமைச் செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் முகக்கவசம் அணிய வில்லை என்றால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சமூக விலகலை கடைபிடிக்காமல் செயல்பட்டாலும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த சுற்ற்றிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.