5 மாநில தேர்தல் - குடியரசு தலைவர் தேர்தலுக்கு முன்னோட்டமா ?
ஜூலை மாதம் நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னோட்டமாக 5 மாநிலத் தேர்தல் இருக்கும் என நம்பப்படுகிறது.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிகிறது. அதன்பின் நடக்கும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிச்சயம் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவர் வெற்றியை நிர்ணயிக்க இந்த 5 மாநிலத் தேர்தல் வெற்றி உதவும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். இதில் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றி பெற அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பது மிக முக்கியம். அதற்கு 5 மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று அதிகமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெறுவது அவசியம்.
ஒருவேளை இந்த தேர்தலில் பாரதியஜனதா கட்சி பெரும்பாலன மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பட்சத்தில் குடியரசுத்த லைவர் தேர்தலில் தாங்கள் நிறுத்தம் வேட்பாளரை எளிதாக வெற்றி பெற வைத்து விடும்.
இல்லாவிட்டால், கூட்டணிக்கட்சிகள் மட்டுமின்றி, பிற கட்சிகளான அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட மாநில கட்சிகளின் ஆதரவை கேட்க வேண்டிய சூழல் ஏற்படும்.
அவ்வாறு மற்ற மாநிலக்கட்சிகளின் ஆதரவைக் கேட்கும் சூழல் வந்தால், பாரதியஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளர் மதச்சார்பற்ற நபராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை கட்சிகள் முன்வைக்கலாம். அப்போது, பாரதியஜனதா கட்சி தனது வேட்பாளர் குறித்து பரிசீலனையில் ஈடுபட நேரிடும்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெறும் வெற்றியைப் பொருத்தே அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்த உறுதியான முடிவு எடுக்கப்படும். இப்போது 9 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது, இந்த தேர்தலிலும் பெற்றும் வெற்றியைப் பொருத்து ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கையை அதிகரித்து, குடியரசு தலைவர் தேர்தலில் தனது வேட்பாளர் காயை நகர்த்தலாம்.
அதுமட்டுமல்ல, மாநிலங்கள் அவையில் தனது பலத்தை உயர்த்திக்கொள்ளவும் இந்த 5 மாநிலத் தேர்தல் வெற்றி பாரதியஜனதா கட்சிக்கு உதவும்.
ஒருவேளை பாரதியஜனதா கட்சி இந்த 5 மாநிலத் தேர்தலில் எதிர்பாராத தோல்வியைச் சந்திக்கும் பட்சத்தில், 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு முதல்படியாக அமையும்.