கொரோனாவால் உயிரிழந்த நீதிபதி குடும்பத்துக்கு 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.. மாஸ் காட்டும் முதல்வர் ஸ்டாலின்.!
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நீஷ் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் நீஷ் (42). கடலூர் மாவட்டம் சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடுவராகப் பணியாற்றி வந்தார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றப் பணியிடமாற்றம் மூலம் நெல்லை மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவராக நியமிக்கப்பட்டார். நெல்லை மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவராகக் கடந்த ஏப்ரல் 26ம் தேதி பதவி ஏற்றார். பதவியேற்ற 2 நாட்களில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கொரோனா நோய்த் தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நெல்லை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் திரு. நீஷ் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிர் நீத்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நீதித் துறை அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, சிறப்பு நேர்வாகக் கருதி 25 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.