இவங்களுக்கும் 2 மடங்கு ஊதிய உயர்வா..? அடித்தது ஜாக்பாட்
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை தொடர்ந்து தேர்தல் ஆணையர்களின் ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக எம்.எல்.ஏக்களின் ஊதியம் 55 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறும் அரசு, எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தியது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டபின், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் உயரிய பதவியான அமைச்சரவைச் செயலாளருக்கு அதிகபட்சமாக ரூ.2.50 லட்சமாக ஊதியம் உயர்ந்தது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரின் ஊதியத்தை காட்டிலும் இந்த சம்பளம் அதிகமாகும்.
இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஊதியம் ஒன்றரை லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் துணை குடியரசுத் தலைவரின் ஊதியம் ஒன்றே கால் லட்சத்திலிருந்து 4 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
அதேபோல், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியமும் கடந்த மாதம் 25ம் தேதி உயர்த்தப்பட்டது. எம்பிக்களின் ஊதியம் ஐந்தாண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்படும் என பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இவ்வாறு மத்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அனைவரின் ஊதியமும் உயர, தேர்தல் ஆணையர்களின் ஊதியம் மட்டும் உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் ஆணையர்கள் பணிக்கான சட்டம் 1991ன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக ஊதியம் அளிக்க வேண்டும்.
அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 3 தேர்தல் ஆணையர்களின் ஊதியமும் 90 ஆயிரத்திலிருந்து 2 லட்சத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.