இனி தேவையில்லாமல் ஸ்கூலுக்கு லீவு விடுவதெல்லாம் கட் …இந்த வருஷம் 15 நாள் கூடுதல் ஒர்க்கிங் டே…
தமிழகத்தில் இந்த ஆண்டு 1, 6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளில் கூடுதலாக 15 நாட்கள் வகுப்பு நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு அறிவித்தபடி வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் சிறந்த முறையில் படைக்கப் பட்டு பல வண்ணங்களில் அச்சிடப் பட்டுள்ளன. இந்த புத்தகங்களை பார்க்கும் போதே மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் என தெரிவித்தார்.
அரசு அறிவித்தபடி அடுத்த மாதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிந்து முடிவுகளும் நல்ல முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை தயார் நிலையில் உள்ளதுநாளை காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.
புதிய பாடத்திட்டம் ஆண்டுக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள் தான் பாடம் நடத்தப் பட்டது. தற்போது கூடுதலாக 15 நாள் வகுப்புகள் நடத்தப்படும் என செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செப்டம்பர் மாதம் வரை அட்மிஷன் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், இவ்வளவு தான் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை வரை முறைப்படுத்தி அந்த கட்டணங்கள் பெயர் பலகைகளில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் மாணவர்களின் நிலைகளை மனதில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆய்வுக்குழு உருவாக்கப்பட்டள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்கட்டமைப்புகள், கழிப்பிட வசதிகள், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் தொடங்கிய உடனேயே பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.