மத்திய அரசின் அறிவிப்பால் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி சேமிப்பு… அண்ணாமலை தகவல்!!
மத்திய பாஜக அரசின் அறிவிப்பினால் 2023ஆம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் அறிவிப்பினால் 2023ஆம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை ஒரு கிலோவுக்கு ரூ.3 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கி வருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்களது தேவைகளை உணர்ந்து மத்திய தொகுப்பிலிருந்து உணவு தானியங்களை பெற்றுக்கொள்வார்கள். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் தேசம் முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைகிறார்கள். தமிழகத்தில் 3.6 கோடி மக்கள் இந்த சட்டத்தின் மூலமாக பயனடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருச்சியில் ரூ.625.76 கோடி திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்
2022-23 நிதியாண்டில் உணவு பாதுகாப்பிற்கு மத்திய பாஜக அரசு 2,06,831 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியிருந்தது. நவம்பர் மாதம் இறுதி வரை உணவு பாதுகாப்பிற்காக 1,50,883 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது மத்திய அரசு. மேலும், 2019 முதல் 2022 நிதி ஆண்டுகளில் 9,96,677 கோடி ரூபாயை மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2021-22 ஆம் ஆண்டு, மானிய விலையில், 29,46,119 டன் உணவு தானியங்களை மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்கியது. மேலும், 2022-23 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு 18,32,153 டன் உணவு தானியங்களை மத்திய பாஜக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய பாஜக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை, 2,00,000 கோடி ரூபாய் செலவில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிமுறை… பொதுமக்கள் கடைப்பிடிக்க சங்கர் ஜீவால் அறிவுறுத்தல்!!
ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் மானியத்தை அரசு ஏற்றுக்கொண்டு 2011ஆம் ஆண்டு முதல் 5 கிலோ அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மத்திய பாஜக அரசின் அறிவிப்பினால் 2023ஆம் ஆண்டில் தமிழக அரசு 1000 கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளது. ஆதலால், இனியும் காலம் தாழ்த்தாமல், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாயும் டீசலுக்கு 4 ரூபாயும், வீட்டு உபயோக LPG சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் 100 ரூபாய் மானியத்தையும் திமுக அரசு வழங்கி தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.