கொலையான எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! | CMStalin
#CMStalin | திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நவல்பட்டு ரோட்டில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதை அடுத்து அவர்கள் ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், அவர்களை பைக்கில் விரட்டி சென்றார். அப்போது திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் முகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே சென்ற போது ஒரு இரு சக்கர வாகனத்தை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் அதிலிருந்து திருடர்களை மடக்கி பிடித்து விட்டு சக காவலர்களுக்கு தகவல் கொடுக்க பூமி நாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த ஆடு திருடும் கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி மற்றும் டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே புதுக்கோட்டையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆடு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் இருக்கும் போது வெட்டி கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்ததாகவும் திருச்சி அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போது கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.