வாட்ஸ் ஆப் குழு உறுப்பினர் அனுப்பிய தேச விரோத செய்தி! 5 மாதங்களாக கம்பி எண்ணும் அட்மின்!
தேச விரோத செய்தியை வாட்ஸ்அப் குழு உறுப்பினர் பகிர்ந்த புகாரில், அதன் அட்மின் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள தலேன் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த பிப்ரவரி 14 அன்று நண்பர்கள் சிலர் இருந்த வாட்ஸ்அப் குரூப்பில் தேசவிரோத மெசேஜ் ஒன்றை பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அச்சிறுவன் பகிர்ந்த தகவலுக்கு, அந்த குரூப்பில் இருந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பேரில் அவர்கள் தலேக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், அத்தகவலை பகிர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அந்த வாட்ஸ் அப் குரூப் அட்மின் ராஜா குர்ஜார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினர்.
எனினும், குழுவின் அட்மினான குர்ஜார் உடனடியாக அந்த குரூப்பில் இருந்து தானாகவே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து குழுவில் இணைந்த கால மூப்பின் அடிப்படையில் வாட்ஸ் அப் விதிமுறையின்படி மேலும் இருவர் அந்த குரூப்பின் அட்மினாக தானாகவே ஆக்கப்பட்டனர். உடனே சுதாரித்துக் கொண்ட அவர்கள் தாங்களாகவே குரூப்பில் இருந்து வெளியேறினர். இறுதியாக ஜூனைத் மேவ் என்ற இளைஞர் அந்த குரூப்பின் அட்மினாக ஆக்கப்பட்டார். அவருக்கு வயது 21. அவர் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி பட்டம் படித்து வந்ததுடன், பகுதிநேரமாக தொழில்நுட்ப பட்டயப் படிப்பும் படித்து வந்தார்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 14 அன்று ஆட்சேபிக்கத்தக்க வகையிலான தகவலை அனுப்பிய சிறுவன், குழுவின் அட்மின் ஜூனைத் மேவ் ஆகியோர் மீது தேசதுரோகம் (124A பிரிவு), வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள் (295A பிரிவு), எந்தவொரு வர்க்கத்தின் மத உணர்வுகளையும் சீர்குலைக்க நோக்கம் கொண்டது, தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். அந்த சிறுவன், மைனர் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், அட்மினான மேவ் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் அட்மின் ஜூனைத் மேவ் மேல் எந்த தவறும் இல்லை. வாட்ஸ்அப் விதிமுறைகள்படி, அட்மின்கள் வெளியேறியதால், தானாகவே அவர் அட்மினாக நியமிக்கப்பட்டுள்ளார். இது வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த விசயம். உண்மை இப்படியிருக்க, செய்யாத தவறுக்காக, 5 மாதங்களாக ஜூனைத் மேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும், போலீசார் விசாரணையை வேண்டுமென்றே தாமதம் செய்துவருவதாக, ஜூனைத் மேவின் சகோதரர் முகமது ஃபக்ருதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேச துரோக வழக்கு சுமத்தப்பட்டிருப்பதால் உயர்நீதிமன்றம் வாயிலாகக் கூட மேவிற்கு பிணை வாங்க இயலவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். ஜூனைத் மேவின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பருவத் தேர்வுகளை அவர் முழுவதும் தவறவிட்டுவிட்டதாகவும் குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர். அதேசமயம், போலீசார் தரப்பில், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளனர்.