வாட்ஸ் குரூப்பால் வந்த பிரச்சனை... அட்மினை கொலை செய்த கொடுரம்...!
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான வாட்ஸ்ஆப் தற்போது அதிகளவில் மக்களாலும், இளைஞர்களாலும், பயன்படுத்தப்பட்டுவருகிறது. தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையேயான சாட் வசதி மட்டுமின்றி, பலர் குழுவாக இணைந்து சாட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளதால் வாட்ஸ்ஆப் நண்பர்களுக்கு இடையே குழு உரையாடல்களுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீடியோ சாட், ஆடியோ சாட் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறான குழு உரையாடல் ஒன்றால், அந்த வாட்ஸ்ஆப் குழுவின் அட்மினே கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.
ஹரியானாவின் சோனேபட் பகுதியைச் சேர்ந்த 29 வயதான லவ் ஜோஹர் என்பவர், தன் பகுதியில் உள்ள நண்பர்களைச் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குரூப் உருவாக்கியுள்ளார். நெடுநாட்களாக ஜோஹர் என்ற பெயரிலேயே இயங்கி வந்த இந்த குழுவில் சில தினங்களுக்கு முன்னதாக தவறுதலாக தனது புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார் குழு அட்மின் லவ்.
இந்த புகைப்படத்தினை வைத்து அவரின் வாட்ஸ்ஆப் குழுவில் உள்ள தினேஷ் என்பவருக்கும் லவ்க்கும் இடையே எழுந்த உரையாடல் மோதலாக மாறி, லவ் என்கிற நபரை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று கூடி அடித்துக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.