துணை ஜனாதிபதி தேர்தல் தேதி - நஜீம் ஜைதி அறிவிப்பு
துணை குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறியுள்ளார். அண்மையில் குடியரசு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதியை நசீம் ஜைதி வெளியிட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமித் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த உள்ளதாக அப்போது கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
790 பேர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்றார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஜூலை 18 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்று கூறினார்.
வேட்புமனு பரிசீலனை ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்ப பெற ஜூலை 21 ஆம் தேதி இறுதி நாள் என்றும் நசீம் ஜைதி கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளரை குறைந்தது 20 எம்.பி.க்கள் முன்மொழிந்து 20 எம்.பி.க்கள் வழி மொழிய வேண்டும் என்றார். மாநிலங்களவை செயலாளர், துணை குடியரசு தலைவர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.