சரத்குமார் நேற்று தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்து, வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது அவரின் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி மற்றும் வருங்கால மருமகன் நிகோலஸ் சச்தேவ் ஆகியோர் உடனிருந்தனர்.
நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கு வரும் ஜூலை 2-ம் தேதி திருமணம் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. மகளின் திருமண ஏற்பாட்டில் பிசியாக இருக்கும் சரத்குமார் - ராதிகா தம்பதி அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் என பல்வேறு பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சரத்குமார் நேற்று தனது குடும்பத்தினருடன் பிரதமர் மோடியை சந்தித்து, வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அப்போது அவரின் மனைவி ராதிகா, மகள் வரலட்சுமி மற்றும் வருங்கால மருமகன் நிகோலஸ் சச்தேவ் ஆகியோர் உடனிருந்தனர்.
Varalaxmi Photos: பிரதமர் மோடிக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பு விடுத்த சரத்குமார்!!
இதுகுறித்த புகைப்படங்களையும் சரத்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில் “ பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி அவர்கள் தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி - நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம்.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பாஜகவின் வளர்ச்சி குறித்தும், பாஜக வேட்பாளர்களின் கட்சி பணிகள் குறித்து பிரதமரிடம் கலந்துரையாடியதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்
இதனிடையே நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா சரத்குமார் “ மக்களவைத் தேர்தலில் நீங்கள் நன்றாகப் போராடினீர்கள்.. ஆனால் இப்போது கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் என்னிடம் கூறினார். 2026ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகப் பணியாற்றத் தொடங்குமாறு அவர் என்னிடம் கூறினார்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ராதிகா தமிழக மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்ய, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நாங்கள் இருவரும் பிரதமரிடம் உறுதி அளித்தோம்” என்றும் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை (AISMK) பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) இணைத்தார். இதை தொடர்ந்து மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ராதிகா சரத்குமாருக்கு பாஜக் சீட் வழங்கியது. எனினும் இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் ராதிகா தோல்வியடைந்தார்.
தமிழ்நாட்டில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை பாஜக அதிகரித்திருந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை, 40 இடங்களில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
