Asianet News TamilAsianet News Tamil

ஒரு அரசு வீழ்வதற்கு ஆளுநர் காரணமாக இருக்கலாமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி!!

ஒரு அரசு வீழ்வதற்கான சூழலை ஆளுநர் துரிதப்படுத்தலாமா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Uddhav vs Eknath: CJI Chandrachud questions Governors role in the trust Vote
Author
First Published Mar 16, 2023, 11:52 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதற்கிடையே, சிவ சேனா கட்சியில் இருந்து 2022, ஜூன் 29ஆம் தேதி 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் வெளியேறினர். இதற்கிடையே, இவர்கள் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அப்போதைய ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்து இருந்தார்.

இதையடுத்து, அப்போதைய சிவ சேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். பின்னர், ஆட்சியும் கவிழ்ந்தது. முதல்வர் பதவியை இழந்தார். பாஜக ஆதரவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். தற்போது கட்சியின் பெயரும், சின்னமும் ஏக்நாத் கைக்கு சென்றுள்ளது.

இதுகுறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திசூட் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''கட்சியில் இருந்து 34 அதிருப்தியாளர்கள் ஆட்சிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததை எவ்வாறு அனைத்து உறுப்பினர்களும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்று எடுத்துக் கொள்ள முடியும். சட்டசபையில் நம்பிக்கை நடத்துவதற்கு இதுபோதுமானதா? 

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் குழு துணை தலைவரின் தகவலால் பரபரப்பு- உற்சாகத்தில் பாஜக

இந்த தருணத்தில் ஆளுநர் தலையிட முடியாது. இது நிலைமையை துரிதப்படுத்தும். மக்கள் ஆளும் கட்சியை புறக்கணிப்பார்கள். ஆளுநர் கூட்டணி அமைத்து அவர்களது விருப்பத்தின் பேரில் ஆட்சி கவிழ்ப்பு செய்வது ஆளும் கட்சிக்கு எதிராக முடியும். ஜனநாயக நாட்டில் இது மிகவும் வருந்தத்தக்க உதாரணமாக அமையும். நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது சபையின் தலைவர் யார் என்பதை உறுதி செய்வதற்குத்தானே தவிர, கட்சியின் தலைவர் யார் என்பதை உறுதி செய்வதற்கு இல்லை. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் இருந்தால், அவர்கள் எப்ஐஆர்-தான் பதிவு செய்ய வேண்டும். ஆட்சி கவிழ்ப்பு செய்யக் கூடாது.

அதிருப்தி எம்எல்ஏக்கள் மூன்று ஆண்டுகள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியில் இருந்தனர். மூன்று ஆண்டுகால மகிழ்ச்சிகரமான திருமண உறவுக்குப் பின்னர் ஒரே இரவில் என்ன நடந்தது?'' என்று நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பகத் சிங் கோஷ்யாரிக்கு ஆதரவாக ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, ''34 சிவ சேனா எம்எல்ஏக்கள் மட்டுமின்றி சுயேட்சை எம்எம்ஏக்களும் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநரிடம் அளித்து இருந்தனர். இதனால், ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தார்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திர சூட், ''பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் 34 எம்எல்ஏக்கள் பரிசீலனையில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆளுநர் வர முடியாது.  நீதித்துறை அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ளக் கூடாது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவர் அழைப்பு விடுத்தது ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையாக இருக்கலாம்.  இது ஆளுநரின் செயலால் அரசாங்கத்தின் வீழ்ச்சியை துரிதப்படுத்தலாம். இது ஜனநாயகத்திற்கு மிகவும் மோசமானது... ஆளுநர்கள் இந்த அதிகாரங்களை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார். 

இந்த வழக்கில் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி இருந்தார். 

மயானமாக மாறும் குஜராத் ஜெயில்கள்! காவல் நிலைய மரணங்களில் முதலிடம்!

 

Follow Us:
Download App:
  • android
  • ios