வாயில் புகையிலை கலவையுடன் நீச்சலடித்த இளைஞர்.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. பின்னர் நடந்தது என்ன?
வாயில் புகையிலை கலவையுடன் நீச்சலடித்த இளைஞர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாவா என்று அழைக்கப்படும் புகையிலை, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகியவற்றின் கலவையை வாயில் வைத்து நீச்சல் குளத்தில் மூழ்கிய 26 வயது இளைஞனின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சேதமடைந்த மூச்சுக்குழாய், துளையிடப்பட்ட நுரையீரலை எதிர்த்துப் போராடிய பிறகு அந்த இளைஞர் தற்போது குணமடைந்துள்ளார். கூரிய வெற்றிலைத் துண்டுகள் அவரது மூச்சுக் குழாயில் சிக்கிக் கொண்டதால், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களைக் கூட இந்த வினோதமான சம்பவம் திகைக்க வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஜெகதீஷ் சாவ்தா கடந்த வாரம் ராஜ்கோட்டில் உள்ள ஹெச்ஜே தோஷி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜெகதீஷ் சாவதா, ஏப்ரல் 30 அன்று அம்ரேலியில் தனது நண்பர்களுடன் நீச்சலடிக்க சென்றுள்ளார்.. நீச்சலடித்த போது, அவரது தலை தவறுதலாக குளத்தின் சுவரில் பலமாக மோதி, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், ஜெகதீஷின் வாயில் மாவா அடைக்கப்பட்டதால், வெற்றிலைத் துண்டுகள் அவரது மூச்சுக் குழாய் வழியாகத் துளைத்து, பலத்த சேதம் அடைந்தன. இதை தொடர்ந்து, கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார், மேலும் காயம் ஏற்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜெகதீஷ் சாவ்தா மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டாரச் என்றும், அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல் நிபுணர் டாக்டர் பிரிஜேஷ் கோயானி மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் அவானி மெண்ட்பாரா ஆகியோர் சிகிச்சையைத் தொடங்கினர்.
டாக்டர் பிரிஜேஷ் கோயானி இதுகுறித்து பேசிய போது, “அவரது மூச்சுக்குழாயில் வெற்றிலைத் துண்டுகள் சிக்கிக் கொண்டன. அத்தகைய நிலையில், ஒரு உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம். வெற்றிலை துண்டுகள் அவரது இடது நுரையீரலில் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தியது.
அவரின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவைப் பராமரிக்க முடியாமல் போனதால் வெண்டிலேட்டர் பராமரிப்பில் வைக்கப்பட்டார். மேலும் நோயாளியின் மூச்சுக்குழாயில் இருந்து எட்டு வெற்றிலைகள், சில இரத்தக் கட்டிகள் மற்றும் பாசிகள் ஆகியவற்றை மருத்துவர்கள் அகற்றினர்.. நோயாளி 12 நாட்கள் வென்டிலேட்டரிலும், அடுத்த வாரம் ஆக்ஸிஜன் ஆதரவிலும் இருந்தார்.அதன் பிறகு, கழுத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை செய்தனர்.
அவர் முழு குணமடைய அவரது கைகால்களுக்கும் மார்புக்கும் பிசியோதெரபி எடுக்க வேண்டியிருந்தது. இது மாவா போதைப்பொருளின் ஆபத்துகளை சித்தரிக்கும் மிகவும் அரிதான நிகழ்வு" என்று தெரிவித்தார்.