திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை அனுபவித்த சுகேஷ் சந்திரசேகர்; உதவிய போலீஸ் அதிகாரிக்கு பணியிட மாற்றம்!!
டெல்லி திகார் சிறையின் டிஜிபியாக இருந்த சந்தீப் கோயல், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதி சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சந்தீப் கோயல் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சந்தீப் கோயலுக்கு சுகேஷ் சமீபத்தில் ரூ.12.50 கோடி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த சர்ச்சையில் சிக்கிய திகார் சிறை டிஜிபி சந்தீப் கோயல் போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டார். அதே நேரத்தில் சிறப்பு போலீஸ் கமிஷனர் சஞ்சய் பெனிவால் திகார் சிறையின் புதிய டிஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்சேனா பிறப்பித்துள்ளார்.
சிறையில் அனைத்து வசதிகளுடன் சொகுசாக இருப்பதற்கு போலீஸ் அதிகாரி டிஜி கோயல் உதவியதாக கூறப்பட்டது. திகார் சிறையில் பணியாற்றி வரும் மொத்தம் 81 போலீசார் சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறையில் மொபைல் போன், டிவி மற்றும் பிரிட்ஜ் என்று அனைத்து வசதிகளையும் சுகேஷ் சந்திரசேகர் அனுபவித்து வந்தது தெரிய வந்துள்ளது.
இத்துடன் பெண் பிரபலங்களும் சிறைக்குள் சுகேஷை சந்திக்க அனுமதிக்கப்பட்டு இருந்த தகவலும் வெளியாகி சர்ச்சையாகி இருந்தது. இவர்கள் சிறைக்குள் செல்ல எந்தவித அனுமதியும் பெறாமல் அனுமதிக்கப்பட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முன்னதாக செப்டம்பரில், நடிகர்கள் மற்றும் மாடல்களான நிகிதா தம்போலி, சாஹத் கண்ணா, சோபியா சிங் மற்றும் அருஷா பாட்டீல் ஆகியோர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுகேஷ் சந்திரசேகரை சந்தித்ததாக செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து இந்தியா டுடேவும் செய்தி வெளியிட்டு இருந்தது.
மேலும், இந்த வார துவக்கத்தில் டெல்லி துணைநிலை ஆளுநரான விகே சாக்சேனாவுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதி இருந்த கடிதத்தில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பாதுகாப்பு பணமாக ரூ.10 கோடி அளித்து இருந்ததாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த அமைச்சரை தனக்கு 2015ஆம் ஆண்டில் இருந்து தெரியும் என்றும் தென்னிந்தியாவில் கட்சி சார்பில் தனக்கு பெரிய பொறுப்பு கொடுப்பதாக ஆம் ஆத்மி உறுதி அளித்து இருந்ததாகவும், இதையடுத்து அந்தக் கட்சிக்கு ரூ. 50 கோடி வரை லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
அதிமுகவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் அந்த சின்னத்தை பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இவர்களுக்கு இடையிலான உரையாடலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சமர்ப்பித்து இருந்தனர். இந்த நிலையில் தனக்கு தினகரன் யார் என்றே தெரியாது என்று சுகேஷ் கூறியிருந்தார். இந்த வழக்கில் மீண்டும் சுகேஷ் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளர் இசுதான் கத்வி.. அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
இதற்கிடையே, உள்துறை அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகத்தின் அதிகாரிகளைப் போல நடித்து டெல்லி தொழிலதிபர் மனைவியிடமிருந்து 215 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்ததற்காக சுகேஷை அமலாக்கத்துறை கைது செய்து இருந்தது.
மேலும், நடிகர்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள விலையுயர்ந்த பரிசுகளை சுகேஷ் கொடுத்து இருப்பதையும் அமலாக்கத்துறை கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.