#BREAKING ஜூலை 31 வரை மட்டுமே ஸ்டெர்லைட்டிற்கு அனுமதி... உச்ச நீதிமன்றம் உத்தரவு...!
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் 4 மாதங்கள் திறக்கலாம் என தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு அனுமதி அளித்தது. இதனிடையே ஸ்டெர்ட்லைட் ஆலை ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது முதலில் வாதிட்ட தமிழக அரசு, ஆக்ஸிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த பிரிவையும் இயக்கக் கூடாது என வாதிட்டது.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலை தயாரிக்கும் மொத்த ஆக்ஸிஜனை மத்திய அரசிடம் தான் வழங்க வேண்டும், தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்களே பிரித்தளிப்போம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு, “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் “ஆக்ஸிஜன் உற்பத்தியில் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த இக்காட்டான சூழ்நிலையில் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு அளவு தேவைப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் தான் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட், “தமிழக அரசுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவையிருந்தால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி எங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து ஆக்ஸிஜன் தேவை என கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் 3 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பதாகவும், இந்த உத்தரவு வருங்காலத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு வரும் காலத்தில் ஆதரவாக அமையாது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஜூலை 31ம் தேதி வரை இயங்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நிலைமையை பொறுத்து ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நீடிக்க உத்தரவிடலாமா? என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.