salman khan verdict judge transfer
இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அரியவகை மான்களை வேட்டையாடிதாக இந்தி நடிகர் சல்மான் கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் உள்ளிட்ட 5 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28ம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சல்மான் கான் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகல் குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் இடமாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 30-ஆம்தேதி வரையில் ராஜஸ்தானில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை முன்கூட்டியே இடமாற்றம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
