salman khan gets bail

மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது, அரியவகை மான்களை வேட்டையாடிதாக இந்தி நடிகர் சல்மான் கான், சைப் அலி கான், தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் உள்ளிட்ட 5 பேர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜோத்பூர் முதன்மை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த மாதம் 28ம் தேதி நிறைவடைந்தது. இந்த வழக்கில் கடந்த 5ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து, சல்மான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சல்மான் கான் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை இன்று பிற்பகல் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, சல்மான் கானின் ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 50 ஆயிரம் ரூபாய் சொந்த பிணையில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், 25,000 ரூபாய்க்கு இரு நபர்கள் ஜாமீன் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.