ஓலா, உபெர் நிறுவனங்களுக்குப் போட்டியாக, மத்திய அரசின் ஆதரவுடன் 'பாரத் டாக்ஸி' என்ற புதிய கூட்டுறவு டாக்ஸி சேவை 2026-ல் அறிமுகமாகிறது. சர்ஜ் கட்டணம் இல்லாத வெளிப்படையான கட்டண முறை மற்றும் ஓட்டுநர்களுக்கு அதிக வருவாய் போன்ற அம்சங்களுடன் இது வருகிறது.
இந்திய மெட்ரோ நகரங்களில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஓலா (Ola) மற்றும் உபெர் (Uber) நிறுவனங்கள் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. இருப்பினும், திடீர் கட்டண உயர்வு, வாகனங்களின் தூய்மையின்மை போன்ற புகார்களும் தொடர்கின்றன.
இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசின் ஆதரவுடன் 'பாரத் டாக்ஸி' (Bharat Taxi) என்ற புதிய சேவை வரும் ஜனவரி 1, 2026 முதல் இந்தியா முழுவதும் அறிமுகமாகிறது.
பாரத் டாக்ஸி - என்ன ஸ்பெஷல்?
மற்ற நிறுவனங்களைப் போல இது ஒரு தனியார் நிறுவனம் அல்ல. இது ஒரு கூட்டுறவு (Cooperative) அமைப்பாகும். 'சகார் டாக்ஸி கோஆப்பரேட்டிவ் லிமிடெட்' (Sahakar Taxi Cooperative Limited) என்ற பெயரில் இயங்கும் அமைப்பு இந்தச் சேவையை வழங்கும். அமுல் (Amul), இஃப்கோ (IFFCO), நபார்டு (NABARD) போன்ற முன்னணி நிறுவனங்கள் போல இதற்கும் அரசின் ஆதரவு கிடைக்கும்.
வெளிப்படையான கட்டணம்
சீக்ரெட் கட்டணம் கிடையாது: ஓலா, உபெர் நிறுவனங்களில் அதிக தேவை இருக்கும்போது வசூலிக்கப்படும் 'சர்ஜ் பிரைசிங்' (Surge Pricing) முறை இதில் இருக்காது. கட்டணங்கள் வெளிப்படையாக இருக்கும்.
ஓட்டுநர்களுக்கு அதிக லாபம்: இதில் ஓட்டுநர்கள் வெறும் தொழிலாளர்கள் அல்ல, அவர்களும் ஒரு வகையில் உரிமையாளர்களே. ஓட்டுநர்களுக்கு வருவாயில் 80% பங்கு நேரடியாகச் செல்லும்.
அரசின் அங்கீகாரம்: இது டிஜிலாக்கர் (DigiLocker) போன்ற அரசு செயலிகளுடன் இணைக்கப்பட உள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு முகமைகளுடன் இணைந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
செயலி எப்படி இருக்கிறது?
தற்போது டெல்லி மற்றும் குஜராத்தின் சில பகுதிகளில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான ஆப் (App) ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC) செயலியைப் போலவே இதிலும் மொபைல் எண், மின்னஞ்சல் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்புக்காக 'MPIN' வசதியும் உள்ளது.
இப்போதைக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்யும் (Scheduled Rides), விமான நிலைய இடமாற்றம் மற்றும் வெளியூர் பயணங்களுக்கான ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.
ஓலா, உபெர் போல 'உடனடி புக்கிங்' (Immediate Booking) வசதி இறுதி வடிவத்தில் வருமா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
ஓட்டுநர்கள் வரவேற்பு
அறிவிக்கப்பட்ட 10 நாட்களிலேயே சுமார் 51,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இதில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஓட்டுநர்களுக்கு அதிக வருமானம் மற்றும் பயணிகளுக்கு நியாயமான கட்டணம் என்ற வாக்குறுதியால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொடக்கத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தாலும், மத்திய அரசே இதன் வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பதால், இது இந்தியாவின் டாக்ஸி சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


