இரு பெண்கள் நுழைந்ததால் பரபரப்பு... சன்னிதான நடை திடீர் அடைப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்!
இன்று அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்கள் நுழைந்ததால் திருக்கோயில் ஆசார விதிமுறைகள் மீறப்பட்டுவிட்டதாகக் கூறி கோயில் சன்னிதானம் திடீரென மூடப்பட்டது.
இன்று அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்கள் நுழைந்ததால் திருக்கோயில் ஆசார விதிமுறைகள் மீறப்பட்டுவிட்டதாகக் கூறி கோயில் சன்னிதானம் திடீரென மூடப்பட்டது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும், சபரிமலைக்கு செல்ல அனைத்து வயது பெண்களும் முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று கேரளாவில் பெண்கள் சேர்ந்து ''பெண்கள் சுவர்'' போராட்டம் நடத்தியதற்கு மறுநாளான இன்று அதிகாலை சபரிமலை கோவிலுக்குள் 40 வயதான மலப்புரத்தை தேர்ந்த கனக துர்கா, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சபரிமலை செல்ல முயன்று திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எந்தவித முன்னறிவிப்பின்றி, சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோயிலுக்குள் இரு பெண்களும் நுழைந்து திருக்கோயிலின் ஆசார விதிமுறைகளை மீறி விட்டதாகக் கூறி பூஜை நடத்த உள்ளதால் சன்னிதான நடைபாதை பூட்டப்பட்டது.
மேல்சாந்தியுடன் தந்திரி அலோசனை நடத்திய பிறகு நடைபாதையை மூட உத்தரவிடப்பட்டது.