கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி - வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல்
கன்னியாகுமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையின் காரணமாக, ரேஷன் அரிசி, மணல் உள்ளிட்டவைகள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து கேரளா மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, குழித்துறை அடுத்த செங்கவிளை பகுதியில், அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே சென்ற லாரி ஒன்றை மடக்கி சோதனையிட்டதில், கேரள மாநிலத்திற்கு 10 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. பின்னர் லாரியும், ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன் சிங் சவான், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை பார்வையிட்டார்.