இந்தியக் கடலோரக் காவல்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான 'சமுத்ர பிரதாப்' நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் கண்காணிப்பை பலப்படுத்தும்.

இந்தியக் கடலோரக் காவல்படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது மாசுக் கட்டுப்பாட்டு கப்பலான (Pollution Control Vessel) 'சமுத்ர பிரதாப்' கப்பலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சயசார்பு இந்தியா

கோவா ஷிப்யார்ட் நிறுவனத்தால் (GSL) கட்டப்பட்டுள்ள இந்தக் கப்பல் 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

"கடலில் இந்தியாவுக்கு எதிராகத் திட்டமிடப்படும் எந்தவொரு சாகசச் செயலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்பதை இந்தக் கப்பல் உறுதி செய்யும்" என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சமுத்ர பிரதாப்பின் சிறப்பம்சங்கள்

கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. 4,170 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலோரக் காவல்படையின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாகும்.

மணிக்கு 22 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,000 மைல்கள் வரை பயணிக்க முடியும். தீயணைப்பு கருவிகள், ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

பெண் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்

இந்தக் கப்பலில் மற்றுமொரு சிறப்பம்சமாக, இரண்டு பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்பட உள்ளனர். கடலோரக் காவல்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றில் பெண் அதிகாரிகள் பணியாற்றுவது இதுவே முதல்முறை. இது ராணுவத்தில் பாலின சமத்துவத்தை நோக்கிய முக்கிய அடி என்று அமைச்சர் பாராட்டினார்.

கேரளாவுக்குச் செல்கிறது!

'கடலின் கம்பீரம்' எனப் பொருள்படும் இந்த 'சமுத்ர பிரதாப்' கப்பல், கேரளாவின் கொச்சி தளத்தை மையமாகக் கொண்டு செயல்படவுள்ளது. இதன் மூலம் கேரளா மற்றும் மாஹே கடல் பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு பலப்படுத்தப்படும்.

இந்த விழாவில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், கடலோரக் காவல்படை இயக்குநர் ஜெனரல் பரமேஷ் சிவமணி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.