மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை வாரணாசியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பலை (Hydrogen Fuel Cell Vessel) மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை மந்திரி சர்பானந்த சோனோவால் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால், இந்த கப்பலின் வணிகச் செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தூய்மையான மற்றும் நிலையான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சர்பானந்த சோனோவால் பேச்சு
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால், ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் கப்பல்களை இயக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது இணைந்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
"ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் இந்தக் கப்பல், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களையும், நிலையான எரிசக்தி மீதான நமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இது வெறும் தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமல்ல; பசுமை ஆற்றல் மற்றும் உள்நாட்டுத் தீர்வுகளை நோக்கி நாம் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கான ஒரு அறிகுறி," என்று அவர் கூறினார்.
தொழில்நுட்பத் திறன்கள்
அவர் மேலும் கூறுகையில், "நமது தொழில்நுட்ப திறன்கள் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ளன. பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உள்நாட்டு நீர்வழிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்றும் குறிப்பிட்டார்.
இந்த புதிய ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல், கடல்சார் துறையில் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் நட்புள்ள தீர்வுகளை நோக்கி இந்தியா எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கையாகும்.


