Asianet News TamilAsianet News Tamil

இந்த மதம் குறித்த சர்ச்சை கருத்தால் ராகுல்காந்திக்கு சிக்கல்.. பல்வேறு மதத்தலைவர்கள் கண்டனம்..

ராகுல்காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் இழிவுபடுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இந்து மத தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Rahul Gandhi is in trouble for his statement on Hinduism various religious leaders condemns Rya
Author
First Published Jul 2, 2024, 2:11 PM IST | Last Updated Jul 2, 2024, 3:43 PM IST

18-வது மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று மக்களவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அப்போது பேசிய அவர் “ இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை பற்றி கூறவில்லை. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை பற்றி பேசுகின்றன. உண்மையான இந்து மதத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கின்றனர்” என்று கூறினார். அவரின் கருத்துகளுக்கு பாஜக கூட்டணி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ராகுல்காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் இழிவுபடுத்தியதாகவும், அவமானப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இந்து மத தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சுவாமி அவதேஷானந்த் கிரி இதுகுறித்து பேசிய போது “ இந்துக்கள் அனைவரிடமும் கடவுளைப் பார்க்கிறார்கள், இந்துக்கள் அகிம்சை மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள். முழு உலகமும் தங்கள் குடும்பம் என்றும், அனைவரின் நலன், மகிழ்ச்சி மற்றும் மரியாதைக்காக எப்போதும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் இந்துக்கள் கூறுகிறார்கள். இந்துக்களை வன்முறையாளர்கள் என்று அழைப்பது அல்லது அவர்கள் வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்று சொல்வது சரியல்ல. இப்படிச் சொல்வதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அவமதித்துள்ளார். 

மக்களவையில் சிவன் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேசியதால் பரபரப்பு; பிரதமர் மோடி பதிலடி!!

இந்துக்கள் வன்முறையாளர்கள் என்றும், இந்துக்கள் வெறுப்புணர்வை உருவாக்குகிறார்கள் என்றும் ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் கூறுகிறார்... அவருடைய இந்த வார்த்தைகளை நான் கண்டிக்கிறேன். இந்த வார்த்தைகளை அவர் திரும்பப் பெற வேண்டும். ஒட்டுமொத்த சமூகமும் புண்பட்டுள்ளது, சந்த் சமாஜ் மீது கோபம் உள்ளது... இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.'” என்று தெரிவித்தார். 

அகில இந்திய சூஃபி சஜ்ஜதனாஷின் கவுன்சில் தலைவர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி பேசிய போது “ நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி, இஸ்லாமிலும் அபய முத்ரா உள்ளது என்று கூறியுள்ளார். சிலை வழிபாடு பற்றி இஸ்லாத்தில் குறிப்பிடப்படவில்லை, எந்த வித முத்திரையும் இல்லை. இதை நான் மறுக்கிறேன், இஸ்லாத்தில் அபய முத்ரா பற்றி எந்த குறிப்பும் இல்லை. ராகுல் காந்தி தனது கருத்தை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

தர்கா அஜ்மீர் ஷெரீப்பின் காடி நாஷின் ஹாஜி சையத் சல்மான் சிஷ்தி இதுகுறித்து பேசிய போது, "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அறிக்கையை நாங்கள் கேள்விப்பட்டோம். 'அபய முத்ரா' குறித்து எந்த ஒரு புனித நூலிலும் அல்லது துறவிகளின் போதனைகளிலும் குறிப்பிடப்படவில்லை, எந்த மதம் அல்லது நம்பிக்கையுடன் தொடர்புடைய சின்னங்கள் என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன் .” என்று கூறினார்.

பீகாரில் உள்ள குருத்வாரா பாட்னா சாஹிப்பின் தலைவர் ஜக்ஜோத் சிங் கூறுகையில் “இன்று மிகவும் சோகமான நாள். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மதங்கள் குறித்த உண்மைகளை சபையில் முன்வைத்த விதம், அவரிடம் சரியான தகவல்கள் இல்லை என்பதை காட்டுகிறது. அவர் முழுமையற்ற தகவல்களை, தவறான தகவல்களை சபையில் முன்வைத்தார். சீக்கியம், இந்து அல்லது வேறு எந்த மதமாக இருந்தாலும், எந்த மதத்தைப் பற்றிய முழுமையான தகவல் இல்லாதவரை ஒருவர் பேசக்கூடாது. முழுமையான தகவல் கிடைத்த பின்னரே பேச வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் ” ராகுல்காந்தி வன்முறையைப் பற்றி பேசியது மிகவும் நல்ல விஷயம், ஆனால் 1984 இல் சீக்கியர்களுடன் நடந்த வன்முறை பற்றி அவருக்குத் தெரியாது. பல பாதிக்கப்பட்ட குடும்பங்கள் டெல்லியிலேயே வாழ்கின்றன என்பதை நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன். ராகுல் காந்தி ஒருமுறை அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்து மதம் மற்றும் சிவபெருமானின் அபயமுத்திரம் குறித்து ராகுல் காந்தி நேற்று மக்களவையில் பேசினார். அப்போது சிவபெருமான், குருநானக், இயேசு கிறிஸ்து, புத்தர் மற்றும் மகாவீர் ஆகியோர் அபயமுத்திரத்தின் அடையாளத்தை உலகம் முழுவதற்கும் அளித்தனர் என்று கூறினார். மேலும் அபயமுத்ரா என்றால் பயப்படாதே, மற்றவர்களை பயமுறுத்தாதே என்று பொருள் என்று கூறிய அவர், மக்களவையில் சிவபெருமானின் படத்தையும் ராகுல் காண்பித்தார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

என் குரலை அடக்க பெரும் விலை கொடுத்த பாஜக.. மாஸ் காட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுலிடம் படங்களை காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு பயப்படுவதும் பயமுறுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற தெளிவான செய்தியை அபயமுத்ரா முழு உலகிற்கும் கொடுத்துள்ளார் என்றும் ராகுல்காந்தி கூறினார்.. இதற்கு பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுலின் பேச்சின் நடுவே குறுக்கிட்ட பிரதமர் மோடி, இந்த தலைப்பு மிகவும் தீவிரமானது. முழு இந்து சமுதாயமும் வன்முறை நிறைந்து என்று கூறுவது தவறு” . இதுகுறித்து ராகுல் கூறுகையில், 'இந்து என்பது பாஜக, ஆர்எஸ்எஸ், பிரதமர் மோடியை மட்டும் குறிக்காது. உள்துறை அமைச்சர் ஷா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios