பிரணாப் முகர்ஜி மறைவுக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி. 2012ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
உடல்நலக்குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 84. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி அவர்களின் இறப்புக்கு இந்தியாவே வருந்துகிறது. தேசத்தின் வளர்ச்சிக்கு அபரிமிதமான பங்காற்றியவர். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பாலும் மெச்சப்படுபவர் என்று பிரணாப் முகர்ஜிக்கு புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தபோது, ராஷ்ட்ரபதி பவனை மக்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்த்தவர் பிரணாப் முகர்ஜி. ராஷ்ட்ரபதி பவனின் கதவை மக்கள் பார்வைக்கு திறந்துவிட்டவர் பிரணாப். பழமையும் புதுமையும் கலந்த அறிவார்ந்த தலைவர். ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். பிரணாப்பின் இறப்பு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களும் நாடு முழுவதும் உள்ள பிராந்திய கட்சி தலைவர்கள், விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.