மரங்களை நடுங்கள்…நீர் நிலைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்…நெகிழ வைக்கும் அனில் மாதவ் தவேவின் இறுதி ஆசை…
இருதய புற்று நோயல் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்த மந்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, தனது கடைசி ஆசையாக, என் நினைவாக மரங்கள் நட்டு பாதுகாத்து வாருங்கள். ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை பேணி தண்ணீரை சேமியுங்கள் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கடைசி ஆசை அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
மறைந்த அனில் மாதவ் தவே, நீர் மேம்பாடு , காடுகள் , சுற்றுச் சூழலை பாதுகாத்தல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். அவருக்கு இருந்த இந்த ஈடுபாடே சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையை நிர்வகித்து வரும் பொறுப்பை பிரதமர் மோடி வழங்கினார்.
தவே அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையை மேம்படுத்த அரும் பாடுபட்டார். இயற்கை மற்றும் மரங்கள் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை தவே தனது உயிலிலும் வெளிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு எழுதப்பட்ட உயிலில் தனது கடைசி ஆசையை தவே விவரித்துள்ளார். அதில், ‘நான் இறந்த பிறகு என்னுடைய நினைவாக எந்த நினைவுச்சின்னமோ, போட்டிகளோ, பரிசு அல்லது சிலையோ நிறுவக்கூடாது என தெரிவித்துள்ளார்.
உண்மையிலே நீங்கள் எனக்கு மரியாதை செலுத்த விரும்பினால், என் நினைவாக மரங்கள் நட்டு பாதுகாத்து வாருங்கள். அதைப்போல ஆறுகள் உள்ளிட்ட நீராதாரங்களை பேணி தண்ணீரை பாதுகாத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்’ என்று கூறியுள்ளார்.
தான் இறந்த பிறகு, மத்திய பிரதேச மாநிலம் பந்த்ராபனில் நர்மதை ஆற்றின் கரையோரம் எளிமையாக இறுதிச்சடங்குகளை மேற்கொள்ளுமாறும் அனில் மாதவ் தவே தனது உயிலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனில் மாதவ் தவேவின் இந்த இறுதி ஆசை அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.