ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு என்பது, பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியின் மிகப்பெரிய சதி. மோடியை பிரதமராக்கிய உத்தரப்பிரதேச வாக்காளர்கள், அவருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “ வங்கியில் சாமானிய மக்களின் பணத்தை டெபாசிட் செய்யக்கூறி, வங்கியில் நிதிநிலையை பெருக்கிக் கொள்ளும் முயற்சியாகும். இந்த பணத்தை விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கடன் கொடுப்பார்கள். ரூ. 8லட்சம் கோடி கடன் பெற்று திருப்பிக்கட்டாமல் இருக்கும் பெரிய தொழில் அதிபர்களுக்கு உதவுவதற்காக இந்த பணத்தை பயன்படுத்துவார்கள்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது மக்கள் விரோத செயல். கடந்த மக்களவைத் தேர்தலில் 73 எம்.பி.களை வெற்றி பெற வைத்த உத்தரப்பிரதேச மக்கள் இந்த முறை பாரதியஜனதா சதிக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து வருகிறது. தவறான உள்நோக்கத்தில் மட்டும் அல்லாமல், செயல்பாடும் மோசமாக இருக்கிறது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு என்பது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக என்றால், ஏன் இதுவரை ஒருவரைக் கூட கைதுசெய்து சிறையில் அடைக்கவில்லை.வெளிநாட்டு வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கியவர்கள் பட்டியல் இருந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.