விவாகரத்து கோரிய முதலமைச்சர்! ஏப்.23-க்குள் பதிலளிக்க முதல்வரின் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, தனது மனைவி பாயலை விவாகரத்து கோரிய வழக்கு விசாரணையில், வரும் ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் பாயல் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஓமர் அப்துல்லா, தனது முன்னாள் மனைவி பாயல் அப்துல்லாவை விவாகரத்துக் கோரும் மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்துக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒமர் அப்துல்லா சார்பில் வழக்கறிஞர் மாளவிகா ராஜ்கோட்டா ஆஜரானார்.
அப்போது பேசிய ஒமர் அப்துல்லா, தனது திருமண வாழ்க்கை இனி சீர்செய்ய முடியாத அளவுக்கு உடைந்து விட்டதாகவும் 2007-ல் இருந்தே தான் திருமணத்துக்குரிய உறவை அனுபவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஒமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் மிரிதுல், தீபா சர்மா அடங்கிய அமர்வு, ஏப்ரல் 23 ஆம் தேதி வருவதற்குள், பாயல் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று கூறியது. உரிய பதில் அனுப்புமாறும் பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று ஒத்தி வைத்தனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று. ஒமர் அப்துல்லா கோரிய விவாகரத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. திருமண உறவு முறிந்ததற்கான காரணங்களை நிரூபிக்கத் தவறியதாக அப்போதைய விசாரணையில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து, ஒமர் அப்துல்லா தற்போது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஒமர் - பாயல் தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டில் இருந்தே ஓமரும், பாயலும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.