அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, மருத்துவமனையில் குழந்தைகளைக் காப்பாற்றிய நர்ஸ்களின் வீடியோ வைரலாகி வருகிறது. நிலநடுக்கத்தின்போது குழந்தைகளைத் தங்கள் உடலால் பாதுகாத்த நர்ஸ்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அசாம் மாநிலத்தில் நேற்று மாலை 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் போது, நாகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் (NICU) நடந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிகாலையில் நிலநடுக்கம்

ஆதித்யா நர்சிங் ஹோம் என்ற அந்த மருத்துவமனையில், மாலை சுமார் 4.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இரண்டு நர்ஸ்கள் பச்சிளம் குழந்தைகளைக் காக்க துணிச்சலுடன் செயல்படும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கம் தொடங்கியவுடன், அறையில் இருந்த பொருட்கள், கண்ணாடி, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிற மருத்துவ உபகரணங்கள் அதிர்வுகளால் அசைந்தன. இந்தக் கடுமையான சூழலிலும், ஒரு நர்ஸ் இரண்டு குழந்தைகளைத் தன் கைகளால் பாதுகாப்பாகப் பிடித்தபடியும், மற்றொரு நர்ஸ் ஒரு குழந்தையைத் தன் உடல் தாங்கிப் பாதுகாப்பளித்தும் காணப்படுகிறார்கள்.

நர்ஸ்களுக்கு குவியும் பாராட்டு

நிலநடுக்கம் நிற்கும் வரை, இருவரும் அமைதியுடனும், உறுதியுடனும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தனர். இந்தத் துணிச்சலான செயலுக்காக அந்த இரண்டு நர்ஸ்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நிலநடுக்கத்தின் மையம், அஸ்ஸாமின் உதல்குரி மாவட்டத்தில் 5 கி.மீ ஆழத்தில் பதிவானது. கவுகாத்தி, உதல்குரி, சோனித்பூர், தமுல்பூர், நல்பாரி மற்றும் பல மாவட்டங்களில் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

Scroll to load tweet…

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள்

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிட இடைவெளியில் மேலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மாலை 4.58 மணிக்கு 3.1 ரிக்டர் அளவிலும், மாலை 5.21 மணிக்கு 2.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் பதிவாகின.

அசாம் தவிர, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்தத் துயரமான தருணத்தில், குழந்தைகளின் உயிரைக் காத்த நர்ஸ்களின் இந்தச் செயல், மனிதநேயத்தின் வலிமையை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.