24 மணி நேரத்தில் 1,336 பேர்..! இந்தியாவில் 18 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு..!
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 18,601 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 590 பேர் பலியாகி இருக்கின்றனர்.
உலக அளவில் பெரும் நாசங்களை விளைவித்து வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 18,601 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்திருக்கிறது. அவர்கள் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனா நோய்க்கு தாக்கு பிடிக்க முடியாமல் 590 பேர் பலியாகி இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டு 47 பேர் பலியாகி உள்ளனர். நாடுமுழுவதும் கொரோனாவில் இருந்து 3,252 மக்கள் பூரண நலம் பெற்று தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 705 மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஸ்டிராவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு இதுவரை 4,666 பேர் பாதிக்கப்பட்டு 232 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக டெல்லியில் 2,081 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 43 பேருக்கு உறுதியான நிலையில் 1,520 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.