மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகர் நியமனம்... யாருனு தெரியுமா?
மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் புதிய பொருளாதார ஆலோசகராக அனந்த நாகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் கடந்த டிசம்பர் மாதத்துடன் தன்னுடைய பணியை நிறைவு செய்திருந்தார். அதன் பின்னர் அவர் பல்கலைக் கழக பணியை தொடங்கியுள்ளார். இதனால் இந்திய அரசின் அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகர் யார் என்ற ஆர்வம் எழுந்தது. இந்த நிலையில் இந்திய அரசின் அடுத்த தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டர் அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் பகுதி நேர உறுப்பினராக 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் ஐஎஃப்எம்ஆர் என்ற தொழில் சார்ந்த பட்டப்படிப்பு கல்லூரியில் டீனாக பணிபுரிந்து வந்தார். அத்துடன் கிரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஐஐஎம் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் தொடர்பான மேல் படிப்பை பயின்றுள்ளார். அத்துடன் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வது வழக்கம். இந்த பொருளாதார ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையில் தயாரிக்கப்படும்.
இந்தாண்டு கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் டிசம்பர் மாதமே அப்பணியை ராஜினாமா செய்துவிட்டார். ஆகவே சஞ்சீவ் சன்யால் தலைமையிலான பொருளாதார குழு இந்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் வருவதற்கு ஒருநாள் முன்பாக வெளியாகும் என்பதால் அதில் மத்திய அரசின் சில முக்கிய கவனங்கள் எந்தெந்த துறைகளின் மீது இருக்கும் என்று கணிக்க முடியும். ஆகவே இந்தாண்டு பொருளாதார ஆய்வறிக்கை எதை நோக்கி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.