‘ஹஜ்’ பயணத்துக்கு கூடுதலாக 5 ஆயிரம் இந்தியர்கள் அனுமதி....மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
ஹஜ் புனிதப் பயணத்துக்கு கூடுதலாக 5 ஆயிரம் இந்திய முஸ்லிம்களை அனுமதிக்க சவூதிஅரேபியா அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
2 நாள் பயணம்
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி 2 நாள் பயணமாக சவூதிஅரேபியா நாட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அந்நாட்டு அரசின் ஹஜ் துறை அமைச்சர் டாக்டர் முகம்மது சலே பின் தாஹீர் பென்டனைச் சந்தித்து பேசினார்.
அப்போது, இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
5 ஆயிரம் பேர்
இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்லும் முஸ்லிம்களை கூடுதலாக 5 ஆயிரம் பேரை அனுமதிக்க சவூதி அரரேபிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 25 பேர் ஹஜ் பயணம் இந்த ஆண்டு மேற்கொள்வார்கள்.
40 ஆயிரம் பேர்
கடந்த 2 ஆண்டுகளில் அரசின் முயற்சியால், 40 ஆயிரம் பேர் கூடுதலாக ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சுதந்திரம் பெற்றபின், இந்த அளவுக்கு உயர்ந்தது இதுதான் முதல்முறையாகும். இந்த உயர்த்தப்பட்ட அளவு என்பது, இந்த ஆண்டு இறுதியில்தான் அமலுக்கு வரும். கடந்த ஆண்டு 35 ஆயிரம் பேர் கூடுதலாக ஹஜ் பயணம் செய்தனர்.
பிரதமர் மோடியின் புகழ், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவு ஆகியவை காரணமாக இந்த நல்லெண்ண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்வு
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 20 பேர் பயணம் மேற்கொண்டனர். கடந்த இரு ஆண்டுகளில் இது 1.75 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்திய பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்திய இரு முக்கிய மசூதிகள், சவூதிஅரேபியாமன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் ஆகியோருக்கு அரசின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன்.
3.55 லட்சம் பேர்
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 3.55 லட்சம் மக்கள் ஹஜ் பயணத்துக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டில் இருந்து முதல் முறையாக ஆண்கள் இல்லாமல்(மெஹ்ரம்) பெண்கள் மட்டும் தனியாகச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் இல்லாமல் செல்லும் 1,300 ெபண்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.